Wednesday, March 25, 2015

|| என்நாவில் இன்கவி - இராமாயணம் ||



ஆதௌ கௌஸல்யா தேவி கர்பஜனனம் 

கைகயாநந்த வர்த்தனம்  |

மாயி தாடகா ஜீவிதா பகரணம் 

அகல்யாஸ்  சாப மோசனம்| 

கரதூஷண ராவணயயோர் ஹனனம் 

ஜனகஸுதா பாலனம் |

ஹ்யேதத் ராமாயண கதா கதிதம் 

ஸ்ரீரமே ராம  ஜீவா ம்ருதம் |

                      --00O00--

வாழ்த்துப் பாயிரம் :

முனி சிரோன்மணி நனிநல்கிய நடையின் நாயகன்
தனிப் பெரும்காவியம் துணையா,  அன்னவர் நல்ஆசியும் 
பனிமலர்ப் பாவைதன் கொழுண ! நின்சரிதை பகர்வான்
கனிந்திடாய் இறைவா ! என்நாவில் இன்கவியாய் எனக்கு !

சதுர்விம்ஸதி இராமாயணம் :

தேவரெலாம் வேண்ட தயரதன்தன் புத்திரனாய்
ஆதவன் ஆதி குலத்தே -- அவதரித்தாய்
ராமா!  இளகிபதித்த மன்னன் ரமித்தனன் 
''ராமராம'' என்றே துதித்து.                                  - 1.

பகலவன் பார்த்து அலர்கமலம் அன்ன
உகப்பொடு மக்கள் வளர்தர -- ஏகினன்
கௌசிகன்தன்  வேள்வியோடு ஐயர்கு சிவன்வில் 
ஒசிந்து முடிப்பான் மணம் !                                 -2.

மாதவன் முன்நடந்த கானில் இளையானும்
மாதவன்தன்   பின்நடக்க தாடகை -- மாதும்
சுபாகுவும் வீழ்த்து அகலிகை நீஉயிர்த்தாய்!
சோபனமாம் கைகால் கொண்டு                       - 3.

பரசுடை ராமன் துணிவை அழித்தாய் !
பரிசென மன்னன் மௌலியுன் -- சிரசிடைத்
தாழ்ப்பான் நினைவதும் கூன்மகள் ஓர்கூற்றால்
பாழ்த்தாய், வனமே புக !                                      - 4.

கங்கையை காதல் குகன்கடத்த செல்வாயேல்
இங்கு பரதாழ்வான் வாழ்தனனோ ? -- என்கோ! கேள் !
தாயர்சொல் கேட்டு தயரதன் ஈந்தத்தை
நோயென போக விடுத்து.                                   - 5.

பரதநம்பி வந்து பணிதலும், மண்ணாள்
மரவடியை தந்துபோக்கி, பஞ்சவடி -- சேர்ந்தாய் !
வரன்பேசி வந்த சூர்பணகைக் காதுமூக்கும்
குறைப்ப குறித்தாள் பகை.                                 - 6.

பதினாறா மாயிரவர் காற்றளைப் பூளை
கதிகாணப் போர்த்தாய் ! இலங்கைக் -- கதிபதி
வன்மம் துளிர்க்கவே ! சீதைபால் நேராதன
அன்பும் வளர்த்தான் அவன்.                              - 7.

மாயா மிருகம் மருட்சியில் பாய்ந்தலைப்ப
நீயும் நெடுந்தூரம் கடந்தற்பால்  -- மாய
வரக்கன் அகம்புகுந்து அன்னையை நச்சி
சிறைகொள  சூழ்த்தான்  இரந்து .                      - 8.

வந்தெதிர்ந்த புள்ளரசன் பட்சத்தை வீழவாங்கி
சுந்தரியை கொண்டு தனிச்சிறையில் -- பந்தித்தான் !
அன்னையைத் தேடி அயர்ப் புற்று ஜடாயுவை
கண்ணுற்றாய் ! வாழ்வு மது !                               - 9.

வழுத்தி  கபந்தன், குரக்கர சன்சேர்
வழிபுகல, அவ்வழியில் அன்னை --  வழங்கும்
பழங்கள் புசித்தருள்வாய்! தன்குருவின் தாள்நயந்தாள்
வாழ சபரிசேர்  வீடு.                                           -10.

கணைஒன்றால் வாலியை வீழ்த்தி இளையோன்  
துணைநின்று பாலித்தாய்!  ராமா ! -- கணையாழி  
கொண்டேகி  சீதை உயிர்மீட்டான் அநுமன் !
''கண்டேன்'' எனவால்  உனது.                            -11.

இச்சையால் தன்னை இசைவிக்க வந்தானை
மெச்சலாம் நல்வழி ராமனை - நச்சுதல்
சொல்லினள்!  ''உன்னுயிர்க்கு  உற்றது அஃதலால் 
புல்லிதுபோல்  மாள்வதே'' என்று!                     -12.

அலைந்துழன்று ஆற்றாதே  தாளீணைக்கீழ் காகம்
தலைசாய்ப்ப வாழ்வித்தான் அன்றெம்  -- தலைவன்  !
ஹனும!நின்   சேரடை யாளம் இதுகாண்
வனப்புடைப் பொன்தலைச் சுட்டி.                    -13.

குரங்குகள் சைலம் திரித்து அணைசெய
ஓரத்த தோர்அணிலம் ஆங்கே -- புரண்டிட்டு
மண்பாவி நற்றுணை போக, இராமனும்
அன்போடு தொட்டிட்டான் கோடு.                     -14.

வரநின்ற வீடணற்கு தஞ்ச மளித்தாய்!
குரக்கதால் முந்நீர் அணைகட்டி -- நேரா
நிசாசரனை  நீறு செயவே படைதொட்டாய் !
பூச்சொரிவர்  விண்ணோர் புகழ்ந்து !                 -15.

இராவணன் பட்டான் அதுஎம் பிழைப்போ?
இராக்கதர் எம்மை குரக்கினம் --தூற
அகல்வான் வகையும் அறிகிலம் அத்தால்
புகல்நீ இராமா எமக்கு !                                     - 16

''எந்தயே! யானும் உனக்காள் ! என்றுனையே
வந்தித்  திசைந்தபின்,  நம்பு  -- நம்பி
சரணே சரணென்று வந்தக்கால் ஏனே
வரிலும் தாழ்கொடான் என்று .                         - 17.

அன்னை அவள்தன்  அருளுக்கு ஆளாமால்
''என்ன இவன்பாபம்? யாரது -- தன்னை
செய்வதிலர்? என்பளே  போலுமே. தம்மை
நைவார் திறத்தும்  அவள் !                                 -18.

ஜானகி தீயில் குளிப்ப அவள்தூயள்  
ஆன படியோ? இளையானை -- கானில் 
வசைமொழிந்த காரணமோ? மற்றெவர் ஏச்சுக் 
கிசைகிலா திஃது உரை?                                       -19.

பரதன் அழலின் பிழைப்ப  அனுமன்
துரிதலும், புட்பக ஊர்திமேல்  -- ஊர்ந்தாய்நீ !
பூசித்து  புநிதநீ ராட்டி அரியணைமேல்
வசிட்டன் புனைந்தான் மௌலி.                       -20.

வண்ணான் ஒருவன் இகழ்வுக்கு ஏலாது
அண்ணல் இராமன் புணர்ப்பெய்தி  -- ஒண்டொடியாள்
தேவியை தொல்கானம் சேர்வித்தான், வான்மீகி
காவியத்தாய் கண்கள் பனித்து .                        - 21.

மக்கள் இருவரை ஈன்றனள் அன்னை !அம்
மக்கள் இருவரும் வில்லாற்றல் -- மிக்கு
வளர்தர, வேள்விப் பசுவைப் பிணைத்துக்
கிளர்ந்தனர், தாதைக் குகப்பு.                                - 22.

அடிச்சியாய் முற்படத்  தேவி பிரிகை,
தொடர்ச்சியாய் கானகத் தேகி  - இடர்தலிவை
'தன்னை' இராமன் பணித்தது ஏலவே !
பின்னை தரியாப் பிரிவு.                                          - 23.

தம்மக்கள் அம்பவள வாய்க்கொண்டு தன்சரிதை
அம்ம!அவன் கேட்க,பின் சீதையை -- எம்மான்!
பிரியலுற்றுத் தாழ்த்தான், தம்பியை என்று
பிரிவனோ அன்றவன்  வீடு.                                   - 24.

 மங்களம் :

கோசல ராமா ! உனக்குஎன்  மங்களம் !
பாசமோ டானகுணக் குன்றுக்கு -- நேசமான 
மங்களம்! யாண்டும் தசரதன் மைந்தனுக்கு
மங்களம் தங்கவே  மிக்கு !!!                                   -25.

முத்திரைப் பாசுரம் :

மூத்தவர் வார்த்தை இளையவர் ஆற்றுதல்
காத்த இராமன்சீர் ஏலுமிவை - தோத்திரம்
நேர்த்தியோடு ஆமே ! திருநிறை வாசன்தன்
ஆர்த்தி அதிசெயல் பட்டு !                                       - 26.

--தாசரதி தாஸன்,
{(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாச ரங்கன் ஸ்ரீநிவாச தாஸன்}.
[K S Srinivasan].